கள்ளக்குறிச்சி, செப். 26: கிசான் திட்டத்தில் மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு நிதியுதவியாக ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வந்தது. அதில் விவசாயி அல்லாத போலி விவசாயிகள் பெயரில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 2,36,864 பேர் போலி விவசாயிகள் பெயரில் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நகரத்தில் கருணாபுரம் பகுதியில் விவசாயிகள் அல்லாத 348 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேற்று கருணாபுரம் பகுதிக்கு சென்று களஆய்வு மேற்கொண்டார். முறைகேடுகளில் ஈடுபட்ட போலி விவசாயிகள் எத்தனை பேர், அவர்களிடமிருந்து இதுவரை வசூல் செய்யப்பட்ட தொகையின் விவரங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், இதுவரை 66,864 போலி விவசாயிகளிடமிருந்து ரூ.20.30 கோடி பணம் வங்கி மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,70,000 போலி விவசாயிகளிடமிருந்து பணம் பறிமுதல் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.