நாகர்கோவில், செப்.25: குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்த மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தநிலையில் பின்னர் இது பலத்த மழையாக மாறியது. கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்தது. நேற்று காலை முதல் மீண்டும் வெயில் கொளுத்தியது. நேற்று காலை வரை முள்ளங்கினாவிளையில் 12 மீ.மீ, குளச்சலில் 3.6, சிற்றார்-1ல் 3.4 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 34.60 அடியாக இருந்தது. அணைக்கு 1064 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.30 அடியாகும். அணைக்கு 1785 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 386 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.