திருவில்லிபுத்தூர், மார்ச் 20: திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் வீதி உலாவிற்கு தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். திருவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா 23ம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் மார்ச் 31ம் தேதி வரை கோயில் திருவிழாக்கள், கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் பெரியமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு அனுமதி கோரி திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் மற்றும் சுரேஷ், மணிகண்டன், முத்துராஜ், சிவா, வினோத்குமரன், ஆனந்த், நல்லுசாமி உட்பட மற்றும் பலர் மீது திருவில்லிப்புத்தூர் வடக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி வேல்ராஜ் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.