சின்னசேலம், மார்ச் 13: சின்னசேலம் பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் பயிரிட்டுள்ள மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்டு சுமார் 50 கிராமங்களும், மிக பரந்து விரிந்த கல்வராயன்மலையும் உள்ளது. சின்னசேலம் தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். சின்னசேலம் பகுதியில் ஆரம்ப கட்டத்தில் தங்கள் கிணற்றில் உள்ள நீரை பயன்படுத்தி விவசாயம் செய்தனர். பல விவசாயிகள் மானாவாரி சாகுபடி மூலம் மரவள்ளி, மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர். விவசாயிகள் பயிர் செய்த பிறகு பெய்ய வேண்டிய பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. மாறாக கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம் போன்ற பணப்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் பொதுமக்கள் குடிநீருக்கே காடு காடாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.