போச்சம்பள்ளி, மார்ச் 13: போச்சம்பள்ளி அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டம் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால், 200க்கும் மேற்பட்ட காளைகளை போட்டியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப அழைத்துச் சென்றனர். போச்சம்பள்ளி அருகே அத்திகானூர் கிராமத்தில் பூனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று(12ம் தேதி) எருது விடும் விழா நடைபெறும் என நோட்டீஸ் அச்சிட்டப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இதனால், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர், போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டைய மாவட்டங்களான தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகளுடன் நேற்று அத்திகானூரில் திரண்டனர். இதையடுத்து, காலை குறிப்பிட்ட நேரத்தில் எருதாட்டம் துவங்கியது.