ஆத்தூர், மார்ச் 12: தலைவாசலில் சர்வீஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வராமல், தேசிய நெடுஞ்சாலையில் பஸ்களை நிறுத்தி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தலைவாசல் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை, வீரகனூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், பேருந்து நிலையத்திற்குள் வராமல், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிச்செல்கின்றன. இப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால், சர்வீஸ் சாலைக்கு கூட பஸ்கள் வருவதில்லை.