வேதாரண்யம், மார்ச் 11: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயில். மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 30 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மாசிமகப் பெருவிழா இந்த ஆண்டு கடந்த 20ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினசரி காலை இரவு ஆகிய இரண்டு வேகைளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. கடந்த 6ம் தேதி தேர் திருவிழாவிற்கு பிறகு சந்திசேகர சுவாமி அலங்கரிக்கப்பட்ட வௌ்ளி ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக சென்று வேதநதி என்னும் சன்னதி கடலுக்கு சென்று நிறுத்தி வைக்கப்பட்டு அங்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் நீராடி இறைவனை வழிபட்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு வாணவேடிக்கை நடைபெற்றது. ஊர்வலத்தில் எக்காளம், மங்கல வாத்தியங்கள், முரசு முழங்க வீதியுலா நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களுக்கு குடிநீர் அன்னதானம் வழங்கப்பட்டது.