திண்டிவனம், மார்ச் 5: திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்ட தர்பூசணி தற்போது அறுவடை செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தாண்டில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் மரக்காணம் சுற்றுவட்டார பகுதிகளான பிரம்மதேசம், முருக்கேரி, உலகாபுரம், கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்பம், ஒலக்கூர், ஊரல், பட்டணம், விநாயகபுரம் ஆகிய கிராம விவசாயிகள் பல ஏக்கரில் ஒவ்வொரு ஆண்டும் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் பயிர் செய்து வந்த தர்பூசணி காய்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட தர்பூசணி பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மாதக் கணக்கில் தங்கியிருந்து காய்களை வாங்கி செல்கின்றனர்.