காவேரிப்பட்டணம், மார்ச் 1: காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் டெல்லியில் போராடிய மக்கள் மீது ஆர்எஸ்எஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக நகர தலைவர் சல்மான் வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரியாஸ் அகமது தலைமை வகித்தார். காவேரிப்பட்டணம் ஜாமிய மஜித் இமாம் ஹாபிஸ் சிக்கந்தர் அலி சாஹெப் முன்னிலை வகித்தார். தமுமுக தலைமை கழக பேச்சாளர் சனாவுல்லா, மமக பேச்சாளர் நவ்ஷாத், தமுமுக மாவட்ட தலைவர் நூர்முஹமத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகர செயலாளர் பாபு, மாநில துணைத்தலைவர் ஜாவித்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவர் ரியாஸ்வான் நன்றி கூறினார்.