நெல்லை, பிப். 26: நாங்குநேரி சுங்கச்சாவடியில் ரொக்கம் செலுத்தி செல்லும் வாகனங்களுக்கு இரண்டு கவுன்டர் திறக்க வேண்டும் என ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தியுள்ளார்.மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை நெல்லை தொகுதி எம்பி ஞானதிரவியம் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் என்ற விரைவு வில்லை முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் செயல்பாடுகளில் உள்ள குறைகளால், மக்களுக்கு இழப்புகள் ஏற்படுகிறது. நாங்குநேரி சுங்கச் சாவடியிலும் இந்த விரைவு வில்லை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான வாகனங்கள் இந்த கட்டண முறைக்கு இன்னும் மாறவில்லை. அதனால் ரொக்கம் செலுத்தி செல்லும் வசதி தற்போது இருந்தாலும், இந்த முறையில் செல்லும் வாகனங்களுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனால் இந்த வழியில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருந்து அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பெரும்பான்மையான வாகனங்கள் விரைவு கட்டண முறைக்கு மாறும் வரை இருக்கிற ஆறு வழிகளில் குறைந்தபட்சம் இரண்டு வழியாவது இந்த வகை வாகனங்களுக்கு ஒதுக்க வேண்டும். மேலும் ரொக்கம் செலுத்தி செல்லும் வாகனங்களுக்கு `இரு வழி பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இரண்டு முறையும் முழு கட்டணம் வசூலிப்பதால் பயணிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே முன்பு போலவே இரு வழிப் பயணத்திற்கு கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.