பாவூர்சத்திரம், பிப்.20: கீழப்பாவூர் வட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. மகசூல் பாதிப்பால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் கீழப்பாவூர் பெரியகுளம், மேலப்பாவூர், மகிழ், சாலைப்புதூர், ஆவுடையானூர், மேலபட்டமுடையார்புரம் மற்றும் சுற்று வட்டார குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. வழக்கம்போல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நெல் நடுவைப்பணியை மேற்கொண்ட விவசாயிகளுக்கு இந்த அளவுக்கு அதிகமான மழை பல வழிகளில் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தியது. நெல் நாற்று நட்ட காலங்களில் மழை விட்டு விட்டு பெய்து வந்ததால் பயிரில் குலை நோய் தாக்கியது. நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் பல மருந்துகள் தெளித்தும் நோய் கட்டுபடவில்லை. தற்போது அறுவடைப்பணி நடந்து வரும் வேளையில் நெல் மகசூல் பாதிக்கும் குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.