கமுதி, பிப்.18: கமுதியில் வெயில் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு,கமுதியில் குடிநீர் ஆதாரமாக விளங்குவது செட்டி ஊரணி, கண்ணார்பட்டி ஊராணி , பட்டி ஊரணி, பாகிஸ்தான் ஊரணி, வண்ணான் ஊரணி ஆகும். பல வருடங்களாக நன்றாக மழை பெய்யாததால் இந்த ஊரணிகளுக்கு சரியாக தண்ணீர் வராமல் இருந்தது.கடந்த 2019ம் ஆண்டு பெய்த கனமழையால் இந்த ஊரணிகள் நன்றாக நிரம்பியுள்ளன. குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் செட்டியூரணி ஆக்கிரமிப்புகளால் நிரம்பாமல் இருந்தது. பேரூராட்சியின் அதிரடி நடவடிக்கையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஊரணி நன்றாக நிறைந்தது. மேலும் ஊரணியை சுற்றி வேலியமைத்து, பன்றி, நாய், மாடுகள் இறங்காத அளவிற்கு பாதுகாக்கப்பட்டது. இதனால் தண்ணீர் சுத்தமாக உள்ளது. தற்போது வெயில் காலம் துவங்க உள்ளதால் இன்னும் 5 மாத அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.