ஊட்டி,பிப்.18: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில் ஆனிக்கல் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆண்டுேதாறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் பூ குண்டம் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டுக்கான ஆனிக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் மார்ச் 1ம் தேதியன்று மாலை 6 மணிக்கு கோயில் நடை திறப்புடன் துவங்குகிறது. 2ம் தேதியன்று காலை 10 மணிக்கு பூ குண்டத்திற்கு மரம் கொண்டு வருதல், மாலை 3 மணிக்கு பூஜை ஆராதனை, முடி காணிக்கை செலுத்துதல், அம்மன் அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இரவு 12 மணிக்கு அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 3ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பூ குண்டம் திறக்க சிறப்பு பூஜை நடக்கிறது.