ராசிபுரம், பிப்.17: பாவை கல்லூரியில் தேசிய அளவிலான சீனியர் பிஸ்ட்பால் போட்டி நடைபெற்றது. போட்டியின் துவக்க விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பாவை கல்லூரியின் இயக்குனர் ராமசாமி, பிஸ்ட்பால் அசோசியேசன் செயலாளர் பாலவிநாயகம், துணைத் தலைவர் அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, கேரளா, அருணாசலபிரதேசம், வெஸ்ட்பெங்கால், மத்தியபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து ஆண், பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. போட்டியின் முதல் நாளில் ஆண்கள் அணியில், கர்நாடகா அணியை வீழ்த்தி, தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கர்நாடக அணி வெற்றி பெற்றது. அதேபோல், கேரளா அணியை புதுச்சேரி அணியும், மத்திய பிரதேச அணியை வெஸ்ட்பெங்கால் அணியும் வீழ்த்தி வெற்றி பெற்றன. மேலும், சத்தீஸ்கர் அணியை கர்நாடகா அணி வீழ்த்தியது.