திருவெண்ணெய்நல்லூர், பிப். 17: திருவெண்ணெய்நல்லூரில் பாடல் பெற்ற கிருபாபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சோழ மன்னர் ஆட்சி காலத்தில் கட்டிய சிறப்பு மிக்க கோயிலாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி ஆரம்பித்து நடக்காமல் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்று முதல் சில வருடங்களாகவே இப்பகுதி சிவபக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 7 நிலைகளும், 120 அடி உயரமும் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த 2016 ஜூலை 26ம் தேதி துவங்கி நடந்தது. கோயிலின் உற்சவதாரர்கள் மற்றும் பக்தர்கள் ராஜகோபுரத்தின் நுழைவுவாயில் 10அடி அகலத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.