தென்காசி, பிப். 11: குற்றாலம், உவரி கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ திருவிழா நடத்துவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா நேற்றிரவு நடந்தது. திருவிழாவிற்காக குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், இலஞ்சிக்குமரன், வள்ளி, தெய்வானை மேளதாளங்கள் முழங்க நேற்று மாலையில் சித்திர சபைக்கு அழைத்துவரப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிவபூதகண வாத்தியங்கள் முழங்க சித்திர சபைக்கு எதிரில் உள்ள தெப்பத்தில் சுவாமி, அம்பாள், இலஞ்சிக்குமரன், வள்ளி, தெய்வானை எழுந்தருளி நீராழி மண்டபத்தை 11 முறை சுற்றி வலம் வரும் வைபவம் நடந்தது. பூஜைகளை கணேசன் பட்டர், பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர், ஜெயமணி சுந்தரம் பட்டர், மகேஷ் பட்டர் ஆகியோர் நடத்தினர். விழாவில் கோயில் உதவி ஆணையர் விஜயலட்சுமி, அகஸ்தியர் சன்மார்க்க சபை முத்துக்குமார சுவாமி, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ராமையா என்ற துரை, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தங்கம் பலவேசம், உறுப்பினர் வீரபாண்டியன், பாஜ நகர தலைவர் திருமுருகன், செந்தூர் பாண்டியன், பிலவேந்திரன் மற்றும் கட்டளைதாரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.