திருக்கோவிலூர், பிப். 11: திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை கண்டித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த மாதம் முதல் விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் தானியங்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றும், கமிட்டியில் விவசாயிகள் விற்பனை செய்த பொருளுக்கு கடந்த மாதம் 20ம் தேதி முதல் சுமார் 3 கோடி வரை பணம் பட்டுவாடா செய்யாத காரணத்தாலும், கூலி உயர்வு கேட்டு மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வராமல் உள்ளதால் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து 28ம் தேதி முதல் மார்க்கெட் கமிட்டி மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்த காரணத்தால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அடி மாட்டு விலைக்கு விற்பதாக வந்த தகவலையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதில் வியாபாரிகள் கமிட்டிக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை உடனடியாக கட்ட வேண்டும். இல்லையென்றால் லைசென்ஸ் கேன்சல் செய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தியதால் பெரும்பாலான தொகை வியாபாரிகளிடம் வசூல் செய்து விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.