திருப்பூர், பிப்.11:திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பழைய பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறிகள் விற்பனை செய்யும் வணிக வளாக கடைகளை இடிக்க காய்கறி கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி சந்தை பழைய பஸ் ஸ்டாண்ட் முன் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. இதில், காய்கறிகள், மளிகை பொருட்கள், பூ வியாபாரம், பழ வியாபாரம், இறைச்சிக்கடைகள், பேக்கரிகள் என 450 க்கு மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையி–்ல், மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள காய்கறி கடைகளை இடித்து அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டம் வரையறுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுக்கு முன்பே மாநகராட்சி நிர்வாகம் அனைத்து காய்கறி கடை வியாபாரிகளுக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.தற்போது பணிகள் தொடங்குவதற்காக காய்கறி சந்தையில் உள்ள கடைகளை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதை கண்டித்து அனைத்து காய்கறி கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்கு காய்கறிச் சந்தை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். தங்கமுத்து முன்னிலை வைத்தார். இதில் காய்கறி தினசரி சந்தையில் உள்ள அனைத்து கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.