கிருஷ்ணகிரி, பிப்.6: ராணுவத்தில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்தி, சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ வீரர்கள் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர். கேப்டன் நரேந்திர பஞ்சால் தலைமையில் 14 ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் சைக்கிள் பயணமாக அசாம் மாநிலம் ஜெய்சால்மரிலிருந்து விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். அவர்கள் ஜோத்பூர், பெல்காம், பாகல்கோட், செகந்திராபாத், வாரங்கல், விசாகப்பட்டிணம், காக்கிநாடா, வேலூர் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக நேற்று மாலை கிருஷ்ணகிரியை வந்தடைந்தனர். கிருஷ்ணகிரியில் உள்ள ராணுவ மருத்துவமனை வளாகத்தில் அவர்களுக்கு, மருத்துவமனை பொறுப்பு அலுவலர் கேப்டன் சீனிவாசன் தலைமையில் மேஜர் சுந்தர்ராஜன், ஓய்வு பெற்ற கேப்டன்கள் சின்னப்பன், போஜராஜன் ஆகியோர் வரவேற்பளித்தனர்.