கோவை, பிப்.6: கோவை மாவட்டத்தில் செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால் மண்டபம், மயிலேரிபாளையம், நாச்சிபாளையம், பாலத்துறை, வழுக்குபாறை, பிச்சனூர், மதுக்கரை, எட்டிமடை, கந்தேகவுண்டன் சாவடி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதியில் இருந்து கட்டிட பணிகளுக்காக கிராவல் மண் பெறப்படுகிறது. கனிம வளத்துறையில் முறையான பர்மிட் பெற்று, உரிய நேரத்தில் வாகனங்களில் கிராவல் மண் எடுத்து செல்லவேண்டும். ஆனால் சிலர் பர்மிட்டை முறைகேடாக பயன்படுத்தி கூடுதல் வாகனங்களில் கிராவல் மண் எடுத்து செல்வதாக தெரிகிறது. கிராவல் மண் எடுக்கும் பகுதி, ஒப்படைக்கும் பகுதிக்கான ரசீதில் குளறுபடி இருந்தாலும் கனிம வள சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் கனிம வளத்துறையினர் விதிமுறை மீறும் கிராவல் மண் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.