விழுப்புரம், ஜன. 29: விழுப்புரம் நகரில் காவல்துறை, நகராட்சி நிர்வகத்தின் அலட்சியத்தால் மீண்டும் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளான பாகர்ஷா வீதி, நேரு வீதி, எம்ஜி ரோடு உள்ளிட்ட சாலையோரங்களில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க நகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு காவல்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்றியது. ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடர்கதையானதால் தினமும் காவல்துறையினர் ரோந்து சென்றனர். நாளடைவில் இதனை முறையாக பின்பற்றாததால், நீதிமன்ற உத்தரவை மீறி நடைபாதை வியாபாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். மேலும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.