காவல்துறை, நகராட்சியின் அலட்சியத்தால் விழுப்புரம் தொடரும் நடைபாதை ஆக்கிரமிப்பு

விழுப்புரம், ஜன. 29:  விழுப்புரம் நகரில் காவல்துறை, நகராட்சி நிர்வகத்தின் அலட்சியத்தால் மீண்டும் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளான பாகர்ஷா வீதி, நேரு வீதி, எம்ஜி ரோடு உள்ளிட்ட சாலையோரங்களில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க நகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என  உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு காவல்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்றியது. ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடர்கதையானதால் தினமும் காவல்துறையினர் ரோந்து சென்றனர். நாளடைவில் இதனை முறையாக பின்பற்றாததால், நீதிமன்ற உத்தரவை மீறி நடைபாதை வியாபாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். மேலும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

குறிப்பாக பாகர்ஷா வீதி, எம்ஜி ரோடு, நேரு ரோட்டில் தொடர்ந்து, காய்கறி கடைகள், பழக்கடை வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். நேருஜி சாலை சாலைவிரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அங்கு நடைபாதைகளை நிழற்குடைகள் வைத்து கடைகளை போட்டுள்ளனர். குறுகலான சாலையில் தொடரும் விபத்துக்களால் பலகோடி மதிப்பில் சாலைவிரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நடைபாதை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இதனால் நடந்து செல்வதற்கு கூட சாலையில் இடமில்லாத நிலை உள்ளது. மேலும் கடை வைத்து நடத்தும் வணிகர்கள் தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். நகராட்சி நிர்வாகமும் போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடைபாதை வியாபாரிகளுக்கென்று தனி இடம்ஒதுக்கீடு செய்து நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையென்றால் பல கோடி செலவு செய்து சாலை விரிவாக்கம் செய்தும் யாருக்கும் பயனில்லாத நிலைதான் உருவாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related Stories: