ஊட்டி, ஜன.24: நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி வனங்களையும், தேயிலை தோட்டங்களையும் கொண்டுள்ளது. இதனால், இங்கு வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிறுத்தை மற்றும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இவைகள் மக்கள் வாழும் பகுதிகளை முற்றுகையிட்டுள்ளன. சிறுத்தைகள் மக்கள் வளர்க்கும் ஆடு, மாடு மற்றும் இதர வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகின்றன. இந்நிலையில், இதனை பயன்படுத்திக் கொண்டு சிலர் சமூக வலைத்தளங்களில் வேறு நாடுகள் மற்றும் வேறு மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளின் வீடியோக்களை எடுத்து நீலகிரி மாவட்டத்தில் நடந்ததாக பதிவிடுகின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஊட்டி அருகேயுள்ள ஆர்குச்சி கிராமத்தில் ஒரு சிறுத்தை சாலையில் நடந்துச் செல்வதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். மேலும் வீடியோவை எடுத்த இளைஞர்கள் படுகு மொழியில் பேசுவதும் அந்த பதிவில் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதனை பலரும் பார்த்தனர்.