கிருஷ்ணகிரி, ஜன.23: கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் பிஸியோதெரபிஸ்டுகளுக்கு 3 நாட்கள் பணியிடை பயிற்சி வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி, வாழ்வியல் திறன் பயிற்சிகள் அளித்து வரும் சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் பிஸியோதெரபிஸ்டுகளுக்கு 3 நாட்கள் பணியிடை பயிற்சி நேற்று துவங்கியது. மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெறும் இந்த பயிற்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார். இதில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, வகுப்பறை சூழலில் கற்றல் குறைபாடு குறித்த விளக்கங்கள், தீர்வுகள் குறித்து விளக்கப்பட்டது.