குறித்த காலத்தில் வீடுகட்டித் தராததால் நஷ்டஈடு அம்பை கான்ட்ராக்டர் ரூ.2.21 லட்சம் வழங்க உத்தரவு

நெல்லை, ஜன. 21: அம்பையைச் சேர்ந்த முதியவருக்கு குறித்த காலத்தில் வீடு கட்டித் தராத கட்டிட கான்ட்ராக்டர் நஷ்ட ஈடு உள்பட ரூ.2.21 லட்சம் வழங்க நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அம்பாசமுத்திரம் தாலுகா, மேல அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (69). இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் சுப்பிரமணியம்  ஆகிய இருவரும் வீடு கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் ஒப்பந்தம் செய்து கொண்ட படி ஓராண்டுக்கு மேல் கடந்தும் முழுமையாக வீடு கட்டிக் கொடுக்கவில்லை. வீட்டில்  60 சதவீதம் பணிகள் மட்டுமே கட்டிக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த காலத்தில் வீடு கட்டுவதற்காக சுப்பிரமணியன் ரூ.9 லட்சத்து 97 ஆயிரத்து 260 பெற்றுள்ளார.

உரிய காலத்திற்குள் பணியை முடித்து வழங்காததால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த கிருஷ்ணன் கான்ட்ராக்டர் மீது நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வக்கீல் பிரம்மா மூலம்  வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், உறுப்பினர் முத்துலட்சுமி மற்றும் சிவ மூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். இதில் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக  ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவு ரூ.13,000 மற்றும் வீடு கட்ட கூடுதலாக பெற்ற தொகை ரூ.ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 320 ஆகியவற்றை சேர்த்து மொத்தம் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 320 கான்ட்ராக்டர் வழங்குமாறு நீதிபதி தேவதாஸ் தீர்ப்பளித்தார். மேலும் இத்தொகையை ஒரு மாதத்தில் கொடுக்கத் தவறினால் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Related Stories: