காரைக்குடி, ஜன.21: காரைக்குடி நகராட்சி சார்பில் புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ள நவீன பார்க் பலான சமாச்சரங்கள் நடக்கும் இடமாக காதலர்கள் மாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும் உள்ளது. நகராட்சி சார்பில் 22 இடங்களுக்கு மேல் பூங்காக்கள் உள்ளன. இதில் பல பூங்காக்கள் போதிய பராமரிப்பு இன்றி உபகரணங்கள் உடைந்து பயனற்று முட்புதர் மண்டி கிடக்கிறது.
இந்நிலையில் கடந்த திமுக நகர்மன்றம் இருந்தபோது மக்களின் பொழுதுபோக்கிற்காக புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அனைத்து வசதிகளுடன் நவீன பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா தனியார் பராமரிப்பில் உள்ளதால் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. வார்டுகளில் உள்ள மற்ற பூங்காக்கள் போதிய வசதிகள் இல்லாததாலும், சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் உடைந்து கிடப்பதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இந்த நவீன பூங்காவிற்கு வருகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பொழுது போக்கிற்கான வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்கள் என்றால் மக்கள் கூட்டம் அதிகஅளவில் இருக்கும். பூங்கா முறையாக பராமரிக்கப்பட்டு வந்தாலும் காதலர்கள் அடிக்கும் லூட்டி தாங்க முடியாத அளவில் உள்ளது. இதனை தனியார் நிர்வாகம் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது.