ஈரோடு, ஜன. 20: ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி ‘அம்மா நினைவு கோப்பை-2020’ என்ற பெயரில் தேசிய அளவிலான திறந்தநிலை வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது. இப்போட்டிக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார் தலைமை தாங்கினார்.பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் செங்கோட்டையன் போட்டியை துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் 6, 8, 10, 12, 14, 17, 20 ஆகிய வயதுக்குட்பட்டவர்கள், 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என 8 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. சுமார் 350 மாணவ-மாணவிகள் போட்டியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர். இதில் முன்னதாக போட்டியை துவக்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: வில்வித்தை போட்டியில் இந்தியாவிலேயே வரலாறு படைக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பழைய காலத்தில் வேட்டையாடுவதற்காக வில் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு போர் களத்தில் பயன்பட்டது.