கிருஷ்ணகிரி, ஜன.20: மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நாடு முழுவதும் நேற்று (19ம்தேதி) 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த முகாமினை கலெக்டர் பிரபாகர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், 1 லட்சத்து 59 ஆயிரத்து 597 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்கள் 10 ஒன்றியங்களில் 900 மையங்களிலும், 2 நகர் பகுதியில் 84 மையங்கள் என மொத்தம் 984 மையங்களில் நடைபெறுகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், உலக சுகாதார நிறுவனம் கண்காணிப்பு மருத்துவ அலுவலர் வேலன், வட்டார மருத்துவ அலுவலர் சுசித்ரா, டாக்டர் இனியாள் மண்டோதரி, பிஆர்ஓ சேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், தாசில்தார் ஜெய்சங்கர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம், மற்றும் சுகாதார பணியாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓசூர்: ஓசூர் பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். இதில், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் வாசுதேவன், மதுவெங்கடாசலபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினர். ஓசூர் மாநகராட்சியில் 15,500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஓசூர் மாநகரில் 56 மையங்கள் மற்றும் 2 நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.