கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள், வன துர்க்கை கங்கம்மாவிற்கு கிடா வெட்டி படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறுக்கி ஊராட்சி மலையோரத்தில், கொல்லப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தையொட்டி மலைக்குகையில் உள்ள வனதுர்க்கை கங்கம்மாவை, அப்பகுதி மக்கள் முன்பு வழிபட்டு வந்தனர்.
வனதுர்க்கை சிலைக்கு அருகில் உள்ள நீரூற்றில் இருந்து தண்ணீர் வற்றாமல் வந்து கொண்டிருந்தது. இதனால், இந்த கிராமத்தை சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி, குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அங்குள்ள ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்ய வேண்டி வனதுர்க்கை கங்கம்மாவிற்கு பொங்கலிட்டுஆடு பலியிட கிராம மக்கள் முடிவு செய்தனர்.