திருப்பூர், ஜன.10:தமிழக அரசு, 1000 ரூபாய் ரொக்க பரிசுடன், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது. பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், இரண்டு அடி துண்டு கரும்பு ஆகியவற்றுடன், ரொக்கமாக, 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் முழுவதும், 7.21 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தலா 1,000 ரூபாய் ரொக்க பரிசை, ஐநூறு ரூபாய் நோட்டுகளாக வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு ரேஷன் கார்டுதாரருக்கு, 1,000 ரூபாய் ரொக்க பரிசு, 126.50 ரூபாய் மதிப்புள்ள, பொங்கல் பரிசு தொகுப்பு என 1,126.50 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக, மாவட்டத்துக்கு, 81.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூ.1000 கொடுப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். இன்று முதல் வருகிற 12-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு 13ம் தேதி வழங்கப்படும்.