மஞ்சூர், ஜன.9:பிக்கட்டியில் பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பஜார் பகுதியில் ஏராளமான கடைகள், குடியிருப்புகள், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. மேலும், மஞ்சூர் மற்றும் முள்ளிகூர் பகுதிகளில் இருந்து எமரால்டு வழியாக ஊட்டிக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக பிக்கட்டி பஜார் பகுதி அமைந்துள்ளது. இதனால் அரசு பஸ்கள், தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்களின் போக்குவரத்தும் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள், பயணிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் நடமாட்டம் மிகுதியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள பஜார் பகுதியில் பொதுகழிப்பிட வசதி இல்லை. கழிப்பிட வசதி ஏற்படுத்த பிக்கட்டி பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவசர உபாதைகளுக்காக மறைவிடங்களை தேடி அலைய வேண்டியுள்ளது. குறிப்பாக பெண்கள், பள்ளி மாணவிகள் பொதுக்கழிப்பிட வசதி இல்லாததால் அவதிக்குள்ளாவதுடன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பிக்கட்டி பஜார் பகுதியில் பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.