உளுந்தூர்பேட்டை, ஜன. 9: உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(49). மாற்றுத் திறனாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, 3 பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு உளுந்தூர்பேட்டை வட்டத் திற்கு உட்பட்ட உ.நெமிலி கிராமத்தில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து இருந்தார். இதனை தொடர்ந்து பல கிராமங்களில் இருந்த கிராம உதவியாளர் பணி காலி இடங்களுக்கும் ஏழுமலை விண்ணப்பித்து இருந்தும், மாற்றுத் திறனாளியான இவருக்கு வேலை வழங்காமல் மற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஏழுமலைக்கு மாற்றுத்திறனாளிக்கான தகுதியின் அடிப்படையில் பணி வழங்கலாம் என உத்தரவு கடந்த 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தும் இதுவரையில் வேலை வழங்கப்படவில்லை.