ஓமலூர், ஜன.8: ஓமலூர் அருகே குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்த கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் கடைவீதி எல்லையம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் அய்யனார்(40). கூலி தொழிலாளியான இவருக்கு ஜோதி(35) என்ற மனைவியும், ஹரி(12), கோகுல்ராஜ்(5) என்ற 2 மகன்களும் உள்ளனர். ஜோதி டைலராக உள்ளார். அய்யனாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 29ம் தேதி ஜோதி வீட்டில் இருந்தபோது மதுபோதையில் வந்த அய்யனார் தகராறு செய்துள்ளார். அப்போது, மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். சிறிதுநேரம் கழித்து அப்பளம் சுட்டு கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, அடுப்பு பற்ற வைத்து அப்பளம் பொறித்துக்கொண்டிருந்த ஜோதி, கொதிக்கும் எண்ணையை எடுத்து வந்து அய்யனார் மீது ஊற்றியுள்ளார்.