கள்ளக்குறிச்சி, ஜன. 8: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கள்ளக்குறிச்சி திமுக எம்பி டாக்டர் கவுதமசிகாமணி 377வது விதியின் கீழ் வலியுறுத்தி பேசினார். அதனையடுத்து மத்திய அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரியை விரைவாக கொண்டுவர வேண்டும். ஏனெனில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். மேலும் கள்ளக்குறிச்சியை சுற்றி 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. கள்ளக்குறிச்சி நகர சாலை மற்றும் கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள புறவழிச்சாலைகளில் தற்காலங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்து நேரிடும்போது பாதிக்கப்படுகின்ற மக்கள் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அல்லது 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மேலும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை அல்லது புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறு தூரத்தை கடப்பதற்குள் விபத்துக்குள்ளானவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.