திருக்கோவிலூர், ஜன. 8: திருக்கோவிலூர் அருகே தேடப்பட்டு வந்த பிரபல சாராய வியாபாரியை போலீசார் அதிரடியாக கைது செய்து, 200 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவின் பேரில் காவல்நிலைய ஆய்வாளர் பாண்டியன், உதவி ஆய்வாளர்கள் திருமால், சுரேஷ், தலைமை காவலர் கந்தன், மத்திய புலனாய்வு பிரிவு தலைமை காவலர் குமரன் ஆகியோர் வீரபாண்டி பகுதியில் கடந்த 2 நாட்களாக தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரபாண்டி குளக்கரைக்கு அருகே சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் ஏற்கனவே சாராய வழக்குகளில் தேடப்பட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சேட்டு (எ) ஒத்தகாது சேட்டு (30) என்பவர் பிளாஸ்டிக் கேனில் சாராயம் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.