திருவெண்ணெய்நல்லூர் அருகே பார்வையற்ற வாலிபர் கிணற்றில் விழுந்து பலி

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 8:  திருவெண்ணெய்நல்லூர் அருகே பார்வையற்ற வாலிபர் விவசாய கிணற்றில் விழுந்து பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், விவசாயி. இவருக்கு முருகன் (35) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. முருகனுக்கு பார்வை குறைபாடு இருந்ததாக தெரிகிறது. இதனால் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் அடிக்கடி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சமயபுரம் மாரியம்மன் கோயில், திருச்சி ரங்கம் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று விடுவது வழக்கம். அதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முருகன் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.

அவர் ஏதாவது, கோயிலுக்கு சென்றிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் அவரை தேடாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஏழுமலை என்பவரின் விவசாய கிணற்றில், முருகன் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த ஏழுமலை, இதுகுறித்து முருகனின் உறவினர்கள் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: