சுரண்டை, ஜன. 7: சுரண்டை பகுதியில் பிஎஸ்என்எல் சேவைகள் அடிக்கடி தடைபடுவதால் வியாபாரிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். சுரண்டையில் கடந்த 40 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பான பங்காற்றி வந்தது. வங்கிகள், ஏடிஎம் மையங்கள், மின்வாரிய அலுவலகம், பத்திரப்பதிவு உள்ளிட்ட அரசு சேவைகளும் மற்றும் பணபரிமாற்றங்கள், இ சேவை மையங்கள், ஆன்லைன் வர்த்தகம், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தல் என பல பணிகளில் இன்டர்நெட் சேவைகள் மூலமாக நடந்து வருகின்றன. இதற்காக பொதுமக்கள் பெரிதும் நம்பியிருந்தது பிஎஸ்என்எல் சேவையே. ஆனால் சுரண்டையில் சமீபகாலமாக பிஎஸ்என்எல் சேவைகள் அடிக்கடி தடைபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மின்தடை நேரங்களில் தடையின்றி சேவைகள் தொடர ஜெனரேட்டர் பயன்படுத்துவதற்காக 2 பெரிய ஜெனரேட்டர் இருந்தும், அதனை பல மாதங்களாக பயன்படுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல மணி நேரங்கள் மின்தடை ஏற்படும் போதும், மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை ஏற்படும் போதும் தரைவழி இணைப்பு (லேண்ட் லைன்) முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. எனவே அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.