சிங்கம்புணரி, டிச.31: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்தில் 21 ஊராட்சி தலைவர், 6 ஒன்றிய குழு உறுப்பினர், 1 மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நேற்று நடைபெற்றது. எஸ்.புதூர் ஒன்றியம் பிரான்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு ஜெயலட்சுமி கை உருளை சின்னத்திலும், இந்திராணி பூட்டு சாவி சின்னத்திலும், மல்லிகா ஆட்டோ ரிக்ஷா சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இதில் வாக்குசாவடி முன்பு ஒட்டப்பட்டுள்ள வேட்பாளர் அறிவிப்பு நோட்டீஸில் கை உருளை சின்னம் மங்கலாக தெரிந்தது. அந்த சின்னத்தின் மீது மர்ம நபர் ஒருவர் வேட்பாளர் நோட்டீசில் உள்ள சின்னத்தை வெட்டி ஒட்டினார். இதற்கு எதிர் தரப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதேபோல் தர்மபட்டி, கொண்டபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 1வது வார்டில் உள்ள வாக்காளர்கள் 37 பேர் நீக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தனர்.