விழுப்புரம், டிச. 31: விழுப்புரம் ஆட்சியர் முன்பு அடுத்தடுத்து தீக்குளிப்பு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆட்சியர் அண்ணாதுரை, அமைச்சர் நிகழ்ச்சியில் பங்குபெற்று விட்டு காலை அலுவலகத்திற்குள் நுழைந்தார். அப்போது அவரது முன்னிலையில் விழுப்புரம் மாவட்டம் வாழப்பட்டாம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தனது மகள் ஓவியா, மகன் யுவராஜ் ஆகியோருடன் சென்று உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். சற்றும் எதிர்பாராத ஆட்சியர் அவர்களை தடுத்துநிறுத்தி விசாரணை நடத்தினார். அதற்குள் அங்கு விரைந்த வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திகேயன் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் அரவிந்தா ஆசிரமத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தேன். கடந்த மக்களவை தேர்தலின் போது விடுமுறை அளிக்காததால், தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டேன். தற்போது அதனை தெரிந்து கொண்ட ஆசிரமத்தின் மேலாளர் என்னை பணிநீக்கம் செய்துவிட்டார்.
வேலைக்கு போக முடியாததால் எனது குடும்பம் வறுமையில் உள்ளது. பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து எனக்குரிய நஷ்டஈடும், திரும்பவும் வேலையை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.