கடையம், டிச.30: கடையம் அருகே அழகப்பபுரம் பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கடையம் யூனியனுக்கு உட்பட்டது அழகப்பபுரம் ரஹ்மத் நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியையும் மெயின் ரோட்டையும் இணைக்கும் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் நடுமத்தியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக சீரமைக்கப்படாததால் பள்ளத்தில் சிமென்ட் காரைகள் உடைந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அஞ்சுகின்றனர். குழந்தைகள் விளையாடும் பகுதி என்பதால் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த பாலத்தின் வழியாக அரசு பஸ் சென்று வருகிறது. பாலம் மேலும் பலவீனமாகி வருகிறது.