புதுக்கோட்டை, டிச. 29: தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் செயல்படும் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மைய மற்றும் வளர்ச்சி வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவியை பயன்படுத்தி மரம் ஏறுவது குறித்து 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பெண்கள் உள்ளிட்ட தென்னை விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர். வேலையில்லா கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் இயந்திரம் மூலம் தென்னை மரங்களில் ஏறி வருவாய் ஈட்டவும், தென்னை மரம் ஏறுவதில் உள்ள ஆள் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் தென்னை வளர்ச்சி வாரியம் ‘தென்னை மரங்களின் நண்பர்கள்’ என்ற திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்து வருகிறது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜாபுதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த தென்னை சாகுபடியாளர்கள் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கிராமம் பாரத பிரதமரின் விவசாயிகள் வருவாய் இருமடங்காக உயர்த்துதல் திட்டத்தின் கீழ் வேளாண் அறிவியல் மையம் மூலம் தத்தெடுக்கப்பட்ட மாதிரி கிராமம் ஆகும். இங்கு விவசாயம், தோட்டக்கலை, கால்நடை சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப பயிற்சி, வேளாண் அறிவியல் மையத்தின் பல்துறை விஞ்ஞானிகளால் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தென்னை மர விவசாயிகளுக்கு நவீனகருவி மூலம் தென்னை மரம் ஏறுவது குறித்து 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.