திருப்புத்தூர், டிச.19: திருப்புத்தூரில் மதுரை முக்கு அருகே அஞ்சலக வீதி சாலையில் ஓட்டல்கள் மற்றும் கடைகள் முன்பு ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளில் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் நகர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். திருப்புத்தூரிலிருந்து எந்நேரத்திலும் எல்லா ஊர்களுக்கும் பஸ் வசதி உள்ளது. மேலும் அனைத்து ஊர்களுக்கும் செல்லக்கூடிய முக்கிய சாலைகள் திருப்புத்தூர் வந்து செல்லும் சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, தேவகோட்டை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கல்லல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்புத்தூர் நகருக்குள் தினந்தோறும் வந்து செல்கின்றது. இதனால் திருப்புத்தூர் நகரில் நாளுக் நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.