நாமக்கல், டிச.19: நாமக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்கள், வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் பணியில், சுமார் 14 ஆயிரம் அரசுத்துறை மற்றும் தனியாத்துறை அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். பள்ளி கல்வித்துறையில் இருந்து அனைவரும் தேர்தல் பணிக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டு, விடுபட்ட ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தேர்தல் பணி உத்தரவு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 172 ஒன்றிய குழு உறுப்பினர், 322 ஊராட்சி மன்ற தலைவர், 2,595 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் என மொத்தம் 3,106 பதவிகளுக்கு மொத்தம் 9,930 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.