ஆத்தூர், டிச.16: தலைவாசல் சைக்கிள் ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூப்பதால், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைவாசலில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சைக்கிள் ஸ்டாண்டில் வாகனங்களை நிறுத்துவோரிடம் ஒப்பந்ததாரர்கள் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தலைவாசல் காய்கறி மார்க்கெட் வரும் பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்படும் சைக்கிள் ஸ்டாண்டை பயன்படுத்தி வருகிறோம். இந்த ஸ்டாண்டில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக ஒப்பந்ததாரர் வசூலித்து வருகிறார். இதுகுறித்து முறையிட்டால், விருப்பமிருந்தால் வாகனங்களை நிறுத்துங்கள் என அலட்சியமாக பதிலளிக்கிறார். இது தொடர்பாக, ஊராட்சி செயலாளர் மற்றும் ஒன்றிய ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சைக்கிள் ஸ்டாண்டில் கட்டண விபரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், போர்டு அமைக்க வேண்டும்,’ என்றனர்.