5 வயது குழந்தையை கொலை செய்த தந்தை கைது

திருவெண்ணெய்நல்லூர், டிச. 16:  திருவெண்ணெய்நல்லூர் அருகே 5 வயது குழந்தையை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன்(30). சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி. சென்னையில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு அர்ச்சனா( 5), கவியாஷினி (2) என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தது. இவர்கள் குடும்பத்துடன் சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதி இடையே கடந்த 12ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புருஷோத்தமன் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தனது சொந்த ஊரான தட்டாம்பாளையம் செல்வதற்காக அன்று மதியம் சென்னையிலிருந்து புறப்பட்டு அரசூர் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் குழந்தை கவியாஷினி இறந்து விட்டதாகவும், தானும் விஷம் குடித்து விட்டதாகவும் செல்போனில் உறவினருக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடிக்கொண்டு சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவேல்பட்டு மயானத்தில் குழந்தை கவியாஷினி இறந்தும், புருஷோத்தமனும்,  மகள் அர்ச்சனாவும் மயக்க நிலையில் இருந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசில் சிவரஞ்சனி புகார் கொடுத்தார். அதில் தனது கணவர், குழந்தை கவியாஷினியை கொலை செய்ததாகவும், மகள் அர்ச்சனாவை கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறிருந்தார். இதையடுத்து போலீசார் கொலை, கொலை முயற்சி மற்றும் தற்கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த புருசோத்தமனை நேற்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: