×

அபிராமம், முதுகுளத்தூர் கிராம பகுதிகளுக்கு பஸ் இயக்க வலியுறுத்தல்

சாயல்குடி. டிச. 13: அபிராமம் முதல் நெடியமாணிக்கம், மணலூர் வழியாக முதுகுளத்தூர் வரை உள்ள கிராம வழித்தடத்தில் புதிய தார்ச்சாலை அமைத்து, அரசு டவுன்பஸ் இயக்க வேண்டும் என 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கமுதி அருகே அபிராமம் வளர்ந்து வரும் நகரமாக விளங்குகிறது. இதனை சுற்றி நத்தம், கண்ணத்தான், மேலக்கொடுமலூர், ஆனைச்சேரி, தட்டனேந்தல், நெடியமாணிக்கம், மணலூர், வைத்தியனேந்தல், கீரனூர், செல்வநாயகபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொடர்ச்சியான கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராமமக்கள் அத்திவாசிய பொருட்கள் உள்ளிட்ட எவ்வித பொருட்கள் வாங்கவும், மேல்நிலைக்கல்வி, மருத்துவ உதவி போன்றவை பெற அபிராமம் அல்லது முதுகுளத்தூருக்கு வந்து செல்ல வேண்டும்.

விவசாயம் முதன்மை தொழிலாக இருந்தாலும், இப்பகுதி கிராமமக்கள் பெரும்பான்மையானோர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் இப்பகுதிக்கு தரமான சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதியில்லாததால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பல துயரங்களை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் அபிராமம்-பார்த்திபனூர் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் நத்தம், நெடியமாணிக்கம் சாலை புதியதாக போடப்பட்டது. சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்பாலத்திலிருந்து பிரிந்து கண்ணாத்தான் வழியாக முதுகுளத்தூர் சந்திப்பு சாலை வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் ஆட்டோக்களில் கூட சென்று வரமுடியவில்லை. அபிராமம், முதுகுளத்தூர் சாலையிலுள்ள கீரனூர், நல்லூர், மேலக்கன்னிச்சேரி சந்திப்பு சாலைகளில் உள்ள தரைப்பாலம், தடுப்புச்சுவர்கள் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சேதமடைந்து பாலம், தடுப்புச்சுவர்களில் மண் மூடைகளை அடுக்கி தற்காலிக தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு வேலியாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அபிராமம், முதுகுளத்தூர், கமுதி மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். பள்ளி நேரத்தில் சென்று வர பஸ் வசதியில்லாமல் சிரமப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இப்பகுதியில் இயக்கப்படும் ஒரே ஒரு தனியார் மினி பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூடுதல் பணம் செலவழித்து, லோடு வேன், ஷேர் ஆட்டோகளில் பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். எனவே அபிராமம் முதல் முதுகுளத்தூர் வரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சாலை, பாலங்களை சீரமைத்து அரசு டவுன்பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : areas ,Mudukulathur ,Abiramam ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...