ராமேஸ்வரம், டிச. 12: ராமேஸ்வரத்தில் தொடர் மின்தடையை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி சார்பில் மின்சார வாரியத்திற்கு இறுதி சடங்கு செய்யும் போராட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் மழை பெய்து விட்டாலே அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் மண்டபம் பகுதியில் பூமிக்கடியில் வரும் மின் இணைப்பு கேபிள்கள் மழைநீர் கடத்துவதற்காக நிலத்தில் தோண்டும்போது சேதமடைந்ததால் கடந்த இரண்டு நாட்களாக ராமேஸ்வரத்தில் மின்தடை ஏற்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கேபிள் சேமடைந்ததால் இதனை சீரமைக்க தாமதமானதால் நாள் முழுவதும் தொடர் மின்தடை ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரம் மின்சார வாரியத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து நேற்று மின்சார வாரியம் அலுவலகம் முன்பு கருமாதி காரியம் செய்யும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் நகராட்சி பஸ் நிலைய வளாகம் பின்புறம் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு கூடிய இந்திய கம்யூ.. கட்சியினர் தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமையில் கருமாதி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார வாரியத்தின் மெத்தனப்போக்கை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் இறந்தவர்களுக்கு கருமாதி காரியங்கள் செய்வது போல் அலுவலக வாசலில் ஒரு தட்டில் சோற்றுக்கற்றாழை, பூமாலை வைத்து அதற்கு பால் ஊற்றி மின்தடையை நீக்கக்கோரி மின்சார வாரியத்திற்கு வலியுறுத்தினர். ராமநாதபுரம் மாவட்டக்குழு உறுப்பினர் செந்தில்வேல், வடகொரியா உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கருமாதி போராட்டத்தில் ஈடுபட்ட முருகானந்தம், செந்தில்வேல், செந்தில், நந்தகிருஷ்ணன், மோகன்தாஸ் உள்ளிட்ட பலரை டவுன் போலீசார் கைது செய்தனர்.