சின்னசேலம், டிச. 12: கல்வராயன்மலையில் தலைவர் பதவிகளை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்காமல், மலைவாழ் மக்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று அரசு, கலெக்டருக்கு மலையாளி பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஷெட்டியுல்டு டிரைப் (மலையாளி) பேரவை மாவட்ட செயலாளர் மாணிக்கம் அரசு மற்றும் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜாகீர்தார் வசம் இருந்தது. அதை அரசு 1976ல் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கல்வராயன்மலை முழுவதும் மலைமக்களே அதிகம் வசிக்கின்றனர். கல்வராயன்மலை மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக பஞ்சாயத்து சட்டத்தின்படி கல்வராயன்மலையை 15 ஊராட்சியாகவும், ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் வரையறை செய்யப்பட்டு பழங்குடியினருக்கான ஊராட்சி ஒன்றியமாக கல்வராயன்மலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடைபெற உள்ளாட்சி தேர்தலுக்கான வரையறையின்படி கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியும், பாச்சேரி, வஞ்சிக்குழி, கரியாலூர் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியும் பொதுப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.