கிருஷ்ணகிரி, டிச.9: கிருஷ்ணகிரி அணையின் 7 மதகுகளை மாற்ற, ₹19.07 கோடி மதிப்பில் திருச்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மதகுகளை மாற்றும் பணி 2020 வரை நடப்பதால், இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் அணையின் பிரதான முதல் மதகு, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி உடைந்தது. இதனால், அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 10 அடி தண்ணீர் வீணானது. இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, ₹3 கோடி மதிப்பில் உடைந்த மதகிற்கு பதிலாக புதிய மதகு பொருத்தப்பட்டது. ஆனால், மற்ற 7 மதகுகளும் இதே போன்று சேதமாகி இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, அன்று முதல் அணையின் மொத்த உயரமான 52 அடியில் 42 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் அணைத்தும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. எனவே, அணையின் மொத்த உயரத்திற்கும் தண்ணீரை தேக்கி வைக்க, மற்ற 7 மதகுகளையும் மாற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.