கரூர், டிச. 9: கரூர் திருமாநிலையூர் முதல் சுக்காலியூர் வரை சாலையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் அகற்றப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் வழியாக மதுரை, கோவை, சேலம் போன்ற பிற மாவட்ட பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கரூர் நகரத்துக்குள் நுழையாத வகையில் திருமாநிலையூர் பகுதியில் இருந்து பைபாஸ் சாலை சந்திப்பு பகுதிகளான செல்லாண்டிபாளையம் சுக்காலியூர் வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டு சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது.நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் தடுப்புச் சுவர் காரணமாக விபத்துக்கள் வெகுவாக குறைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சீராக சென்று வந்தன.
கடந்த சில ஆண்டுகளாக தடுப்புச் சுவர் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது திருமாநிலையூர் பகுதி முதல் சுக்காலியூர் வரை அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் திடீரென அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.