உடுமலை, டிச. 4: பெதம்பம்பட்டி நால்ரோட்டில் விதிமுறை மீறி மது விற்பனை நடப்பதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடுமலை அருகே பெதம்பம்பட்டி நால்ரோடு பகுதியில், தனியார் கல்லூரி, அரசு பள்ளி, வங்கிகள், ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பேருந்து நிறுத்தத்தில் மாணவ, மாணவிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதில், செஞ்சேரிமலை ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் அருகே உள்ள பாரில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே மது விற்பனை நடந்து வந்தது.